முள்ளிவாய்க்காலை படுகொலை வாரம் வடகிழக்கில் இன்று ஆரம்பமானது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் நினைவாக மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை பகிர்வோம்”, என்னும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இறுதிக்காலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட மனித பேரவலத்தையும் கொடுமையினையும் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் கொண்டுசெல்லும் வகையில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு
வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகே கஞ்சிப்பானை வைத்து கஞ்சி காய்ச்சப்பட்டு அவற்றினை மக்களுக்கு வழங்கி தமது துயரினையும் எதிர்கொண்ட அழிவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறினார்கள்.
தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் மக்களின் உணர்வுகள் சர்வதேச சமூகத்தினால் மதிக்கப்பட்டு அவர்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் வடகிழக்கு மாகாண வாழ்வுரிமை கழகத்தின் தலைவர் லவகுமார்,பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர்களாக அருட்சகோதரர் ஜெகநாதன் அடிகளார்,எஸ்.சிவயோகநாதன்,அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார்,வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு நகர் மற்றும் பிரதான பஸ்நிலையம் என்பவற்றில் கஞ்சிகள் பகிரப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.




முல்லைத்தீவு
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் நிகழ்வு முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக ஆரம்பம்
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று அழிக்கப்பட்டதன் நினைவாக தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம் வருடம்தோறும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது
குறித்த காலப்பகுதியில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்ற பல்வேறு பகுதிகளிலும் தமிழின படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தில் உடைய ஆரம்ப நாள் நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றிருந்தது
இந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்றொழிக்கப்பட்ட நந்திக்கடல் பிரதேசத்திலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்
இதேவேளை இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று அழிக்கப்பட்ட போது உணவின்றி தவித்த வேளையில் அவர்களுக்கு உயிர்காத்த உணவாகிய கஞ்சி வழங்குகின்ற நிகழ்வுகளும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது..



அம்பாறை
அம்பாறை மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் நிகழ்வு இன்று திருக்கோவில் மண்டானை பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.
வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் உப்பில்லா கஞ்சி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கருத்துரைகளும் வழங்கப்பட்டன.


யாழ் நல்லூர் திலீபன் நினைவு இடத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் அனுஸ்டிப்பு.

