ஜனநாயக ரீதியான போராட்டங்களை நான் மதிக்கின்றேன்-வியாழேந்திரன்

வன்முறை அற்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை நான் மதிக்கின்றேன் வரவேற்கிறேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டில் நடைபெறும் விடயங்கள் யாவரும் அறிந்ததே! போராட்டம் கலவரமாக மாறியமை வேதனையானது. பல உயிர் இழப்புக்கள், உடைமைச் சேதங்கள்… இது நீடிக்கக் கூடாது. வன்முறை அற்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை நான் மதிக்கின்றேன். வரவேற்கிறேன். அதை யார் அடக்க முற்பட்டாலும் பிழை. நாங்களும் கடந்த காலத்தில் பல போராட்டங்களை மேற்கொண்டவர்கள். ஆனால் சிலர் வன்முறையைத் தூண்டி தங்கள் சார் இலக்கை அடைய நினைக்கின்றனர். இதை சிலர் வரவேற்கலாம் . ஆதரிக்கலாம் .ஆனால் அதன் வளர்ச்சி ஆபத்தாக முடியும் என்பது ஆங்காங்கே நிரூபணமாகியுள்ளது.

சிலர் முகப்புத்தகங்களில், சமூக வலைத்தளங்களில் மறைந்திருந்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை போட்டு , மற்றவர்களை தூண்டி தங்கள் பழி தீர்க்கும் நடவடிக்கைகளை செய்ய நினைக்கின்றனர். உதாரணமாக என் தொடர்பாகவே சில செய்திகள் பரப்பப்படுகின்றன.

01. நான் வெளிநாடு சென்று விட்டேன். – நான் தொடர்ச்சியாக என் வீட்டில் தான் உள்ளேன் . எப்போதும் வந்து பார்க்கலாம். நான் இறந்தாலும் என் மண்ணில் தான் இறப்பேன்.

02. தென்னிலங்கை அரசியல்வாதிகள் என் வீட்டில் உள்ளனர். – எவரும் இங்கு இல்லை. அப்படி எவருக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. 24 மணித்தியாலமும் என் வீட்டுக்கு வந்து பார்க்கலாம்.

நேற்றைய தினம் ஒரு பழைய எனது வெனரை கிரானில் ஓர் இருவர் பற்ற வைத்தார்கள் . அந்த ஊரில் என்னால் முடிந்த சேவைகளை செய்துள்ளேன். ஒரு புறம் மன வேதனையாக இருந்தாலும், அந்த வேலையை செய்தவர்களை நான் வெறுக்கவில்லை. அவர்களை நான் நேசிக்கிறேன். அவர்கள் ஏன் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த ஊரிலிருந்தவர்கள் பலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கவலை தெரிவித்தார்கள்.

நாம் பிழை செய்தால் தான் மற்றவர்களுக்கு பயப்பிட வேண்டும். முடிந்த வரை கடந்த ஒன்றரை வருடத்தில் எம் மாவட்ட மக்களுக்கு மனதாலும் , செயலாளும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நல்லதே செய்துள்ளோம். நாம் யாருக்கும் துரோகம் செய்யவில்லை .செய்யப்போவதும் இல்லை . அது என்னை நேசிக்கும் என் மாவட்ட மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

2015 பாராளுமன்றத் தேர்தலில் நாம் அழிந்து விடுவோம்! என்றார்கள் . அந்த தேர்தலில் வெற்றி பெற்றோம். 2020 இலும் நாம் அழிந்து விடுவோம்! என்றார்கள். .அதிலும் நாம் வெற்றி பெற்றோம். காரணம்! கடவுளின் அன்பும், ஆசிர்வாதமும், எந்த நிலையிலும் தன்னலம் கருதாது முற்போக்குத் தமிழர் கழகத்திற்கும் , அதன் தலைமைத்திற்கும் விசுவாசமான என் முற்போக்கு உறவுகளும், எம் நேசிக்கும் மக்களுமே எம் வெற்றிக்கு காரணம்.

ஒரு சிலரின் உண்மை முகங்களை இனங்காணவும் இந்த சூழல் உதவுகிறது . எது எவ்வாறாக இருந்தாலும் முற்போக்குத் தமிழர் கழகத்தில் உள்ள உண்மையான உறவுகளின் பங்களிப்புடன் எம் இன மக்களுக்காக தொடர்ந்து எமது முற்போக்குத் தமிழர் கழகம் அர்ப்பணிப்புடன் வெற்றியாக பயணிக்கும்.

கடந்த சில தினங்களாக என்னோடு நேரடியாகவும் , தொலைபேசி மூலமும் நலன் விசாரித்த அத்தனை உறவுகளுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள் பல.. இந்த சூழலின் யாரும் எந்த வன்முறையிலும் ஈடுபடாது , அமைதியாக இந்த சூழலை கடந்து செல்லுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *