நாடளாவிய ரீதியில் பல பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலை இன்று 100 வீதத்தால் அதிகரித்துள்ளது.
ஊரடங்குச் சட்டம், எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல காரணிகள் விலை அதிகரிப்புக்கு காரணமாக இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்ட மரக்கறிகளின் அளவும் கணிசமான வீழ்ச்சியை கண்டுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் பெரும்பாலும் மொத்த வர்த்தக நிலையமாக உள்ளதுடன், மேல் மாகாணத்தில் இருந்து வரும் வர்த்தகர்களில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளரான கிறிஸ்டி விஜேரத்ன தெரிவித்தார்.
புத்தாண்டு காலத்துடன் ஒப்பிடுகையில், மரக்கறி விநியோகத்தில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் 1.5- 2 மில்லியன் கிலோகிராம் மரக்கறிகள் வருவதாகவும், இன்று 300,000 கிலோகிராம் மாத்திரமே வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் தேவையை பூர்த்தி செய்தால் மரக்கறிகளின் விலை சீராகும் எனவும் அவர் தெரிவித்தார்.