
சர்வதேசப் பொறிமுறைக்கு இலங்கையில் இடமேயில்லை
ஐ.நா. உள்ளிட்ட பல அமைப்புகளிடமும்
தெளிவாகக் கூறிவிட்டோம் என்கிறார் பீரிஸ்!
“இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்க்க சர்வதேச பொறிமுறையை ஒருபோதும் ஏற்கமாட்டோம். அதேபோல இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நகர்வுகளையும் அனுமதிக்கமாட்டோம். இந்த விடயத்தை அனைத்துலக சமூகத்திடமும், ஐ.நா. மற்றும் அதன் கிளை அமைப்புகளிடமும் தெளிவாக எடுத்துரைத்துவிட்டோம்.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் பீரிஸ் மேலும் கூறியவை வருமாறு,
“ஐ.நா. பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உரையாற்றினார். அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச ஆன்மீக மாநாடொன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரதான உரையை நிகழ்த்தினார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு நிகழ்நிலை மூலம் நான் பதிலளித்தேன்.
நியூயோர்க்கில் வைத்து இரு தரப்பு சந்திப்புகள் இடம்பெற்றன. குறிப்பாக பிரிட்டனின் பிரதிநிதி மற்றும் பொதுநலவாய அமைப்பின் பிரதான செயலாளர் ஆகியோருடன் பரந்துபட்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தேன். மேலும் சில சந்திப்புகளும் இடம்பெற்றன. மேற்படி சந்திப்புகளின்போது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது, இலங்கை தொடர்பில் கடைப்பிடிக்கும் அணுகுமுறை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரியப்படுத்தினோம்.
மனித உரிமைகள் பேரவையுடன் மாத்திரமல்ல ஐ.நா. உட்பட அதன் ஏனைய கிளை அமைப்புகளுடன் நாம் ஒத்துழைப்புடன் செயற்பட்டுவருகின்றோம். எதிர்காலத்திலும் இந்த நடைமுறை தொடரும். அதில் எவ்வித மாற்றமும் வராது. கொரோனாப் பரவலுக்கு மத்தியிலும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் எடுத்துரைத்தோம்.
அத்துடன், இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் கடப்பாடு தேசிய நிறுவனங்களுக்கே இருக்கின்றது. அதற்கான பொறுப்பை நாம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கமாட்டோம். அவ்வாறு வழங்குவது அரசமைப்புக்கு முரணான செயலாகும் என்பதுடன் அரசியல் கட்டமைப்புக்கும் எதிரான நடவடிக்கையாகும்.
சிறிய நாடோ, பெரிய நாடோ, சகல நாடுகளையும் பொதுவாகவே கருத வேண்டும் என்பதே ஐ.நாவின் பிரதான கோட்பாடாகும். எனினும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை இலக்கு வைத்து செயற்பட்டுவருகின்றது.
சர்வதேச பொறிமுறையை உருவாக்கி, சாட்சிகளைத் திரட்டி, இலங்கையை சர்வதேச நீதிமன்றம் முன்னிலையில் கொண்டுசெல்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இதற்கு இடமளிக்கமாட்டோம். சாட்சிகளின் தகவல் வெளியிடப்படாது. எந்த அடிப்படையில் சாட்சிகள் திரட்டப்படுகின்றன என்பதும் தெரியாது.
இதற்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகில் தடுப்பூசி தேவைப்படுகின்றது. பல நாடுகளில் தடுப்பூசி திட்டம் துரிதமாக இடம்பெறவில்லை. அவற்றுக்கு நிதியை பயன்படுத்தலாம்.
உலகில் வேறு நாடுகளில் பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றையெல்லாம் விடுத்து இலங்கை இலக்கு வைக்கப்படுவது ஏன்?
மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது அணிசேரா நாடுகள் மற்றும் முஸ்லிம் நாடுகள் ஆதரவை வெளிப்படுத்தின. மனித உரிமை விவகாரத்தை உள்ளக பிரச்சினைகளில் பயன்படுத்தக்கூடாது எனவும் அவை சுட்டிக்காட்டின.” -என்றார்.

