இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை, அரசியல் ரீதியாக பழிவாங்கும் கருவியாக பயன்படுத்துகின்ற விடயத்தை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்களின் தன்னிச்சையான தடுத்து வைப்புகள், அரசு பயங்கரவாத தடைச் சட்டத்தை தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்துகின்றது என்பது இதன் ஊடாக புலனாவதாக அந்தக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராயும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழு நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை தங்கியிருக்கும் இந்தக் குழு, அரச உயர்மட்டம், தொழிற்சங்கங்கள், சிவில் சமூகம், முதலாளிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இதற்கமைய, அண்மைக்காலமாக நாட்டில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் இராஜதந்திரிகள் குழு இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் சந்தித்து கலந்துரையாடியது.


