சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் அமைத்திருப்பதன் ஊடாக சமையல் எரிவாயு விலைகளை 125 முதல் 150 ரூபா வரை குறைக்க வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், உலகச் சந்தையில் சமையல் எரிவாயு விலை உயர்ந்தமை மற்றும் டொலர் அதிகரிப்பு காரணமாக விலை அதிகரிக்க கம்பனிகள் கோரின. இது குறித்து, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஆராய்ந்து அமைச்சரவை உபகுழு ஒன்றை நியமித்தது.
நிறுவனங்களின் செயற்திறன் இன்மையை சீர் செய்து பாவனையாளர்களுக்கு அதன் நன்மையை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, இரு சமையல் எரிவாயு நிறுவனங்களையும் இணைத்து அரச நிறுவனமாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தற்பொழுதுள்ள விலையை விட 125 முதல் 150 ரூபா வரை குறைக்க வாய்ப்புள்ளது. இதற்காகவே புதிய நிறுவனம் அமைக்கப்பட்டு தலைவர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


