தடுப்பூசிகள் தொடர்பான தவறான கருத்துகளை மக்களுக்குப் பரப்பும் வகையில் வெளியிடப்படும் காணொளிகள் நீக்கப்படுமென யூடியூப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான தடுப்பூசிகள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய மருத்துவ கொள்கைகளிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலையில், கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி கொள்கைகளை மீறியமைக்காக இதுவரையில் 130,000க்கும் மேற்பட்ட காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை எனவும் நாள்பட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அந்தக் காணொளிகளில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததாக யூடியூப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே கொரோனா தடுப்பூசி மாத்திரமின்றி அங்கீகரிக்கப்பட்ட எந்தத் தடுப்பூசி குறித்தும் தவறான கருத்துகளைப் பரப்பும் பட்சத்தில் அந்தக் காணொளிகள் நீக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிய தடுப்பூசி சோதனைகள், வரலாற்றில் தடுப்பூசியின் வெற்றிகள் அல்லது தோல்விகள், தடுப்பூசிகள் குறித்த பொது விவாதம் என்பனவற்றை உள்ளடக்கும் காணொளிகள் மாத்திரமே தொடர்ந்தும் அனுமதிக்கப்படுமென யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


