கௌரவமான முறையில் பசில் இராஜினாமா செய்தமை வரவேற்கத்தக்கது என்கின்றார் வாசுதேவ

கௌரவமான முறையில் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தமை வரவேற்கத்தக்கது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தை தோற்கடிக்க பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவிர்த்து ஏனைய ராஜபக்ஷர்கள் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முழுமையாக இரத்து செய்ய அவதானம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாகாண சபை முறைமை, தேர்தல் முறைமை குறித்து ஒரு தீர்மானத்தை எட்டிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இருப்பினும் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்படவில்ல என்பதனால் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்துவதில் சிக்கல் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *