
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புதிதாக விகாரை அமைக்கப்பட்டு அங்கு புத்தர் சிலை வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்கள் எதிர்ப்பு போராட்டத்தால் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. குருந்தூர் மலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. விசாரணைக்கு அமைவாக, குருந்தூர்மலையில் எவ்வித மதக்கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்த உத்தரவையும் மீறி அங்கு தொல்பொருள் அகழ்வாராய்ச்சி என்னும் போர்வையில் புதிதாக விகாரை அமைக்கப்பட்டுள்ளது. புதிய விகாரைக்குரிய விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், ‘கபோக்’ கல்லினால் ஆன புத்தர் சிலையை குருந்தூர் மலையில் நிறுவுவதற்கும் நேற்றுத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்குரிய ஏற்பாடுகளை பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொண்டிருந்தனர். நேற்றைய தினம் வழிபாடுகளுக்குரிய ஒழுங்குகள் முழுமைப்படுத்தப்பட்டிருந்தன. சிங்கள மக்கள் வாழும் பகுதி ஊடாக பௌத்த அலங்காரங்களுடன் ஊர்த்தியும் சென்றிருந்தது. மேலும் குருந்தூர் மலையில் புத்தர் சிலை நிறுவும் நிகழ்வில் கலந்து கொள்ள தென்னிலங்கையிலிருந்து சொகுசுப் பேருந்தில் பிக்குகள், மக்கள் வந்திருந்தனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குருந்தூர் மலையில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக நூற்றுக் கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான கி.சிவலிங்கம், இ.கவாஸ்கர், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் மக்களுடன் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்துக்கு வருகைதந்த மூவரை வழிமறித்த பொலிஸார் அவர்களைத் தாக்கி கைது செய்து, பின்னர் விடுவித்திருந்தனர்.
தொடர்ந்து குறித்த பகுதிக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன், குருந்தூர் மலையையும் பார்வையிட்டிருந்தார்.
அதன்போது கருத்துத் தெரிவித்த அனுரமானதுங்க, குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின்மூலம் கிடைத்த எச்சங்களை பேணிப் பாதுகாப்பதற்காக புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளையே தாம் முன்னெடுப்பதாகவும், அங்கு புதிதாக கட்டடங்கள் எதனையும் கட்டவில்லை எனவும் தெரிவித்தார். அத்தோடு தமது திணைக்களத்துக்கும், பிக்குகளுக்கும் இராணுவத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், குருந்தூர் மலையைச்சூழ உள்ள வயல்நிலங்கள் தொல்லியல் இடமெனக்கூறி, தமிழ் மக்களை பிக்குகள் தடுப்பது தொடர்பிலும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பிக்குகள் தடுப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என அவர் அதற்குப் பதிலளித்திருந்தார். மேலும் குருந்தூர் மலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மக்கள் பிரதிநிதிகள், மக்களுடன் கலந்துரையாடல் நடத்துவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.