இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்து வருகின்றது. இதனால் மக்களது வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் நாட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக நலன் விரும்பிகளிடமிருந்து சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதேவேளை மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி 51,988 அமெரிக்க டொலர்கள், 14,508 ஸ்டெர்லிங் பவுண்ட்கள், 4253 யூரோக்கள் மற்றும் 11,646 அவுஸ்திரேலிய டொலர்களை நலன் விரும்பிகளிடமிருந்து பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டிற்கு தேவையான எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாடுகளில் உள்ள நலன் விரும்பிகளிடமிருந்து அந்நிய செலாவணியைப் பெறுவதற்காக அண்மையில் இலங்கை மத்திய வங்கி கணக்குகளை ஆரம்பித்தது.
இந்நிலையில் இவ்வாறு வழங்கப்படும் அனைத்து வெளிநாட்டு நாணய நன்கொடைகளும் மருந்து, எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என மத்திய வங்கி உறுதியளிக்கிறது.
பற்றுச்சீட்டுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நன்கொடைகளைப் பயன்படுத்தும் விதம் என்பவற்றை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி ஆளுநரால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

