
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அண்மையில் ஆரம்பமான கலந்துரையாடலின் பின்னர் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இலங்கை மக்கள் உள்ளுராட்சிக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.விஷ்ணுகாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் துஸ்யந்த், ஸ்ரீ டெலோவின் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் பி.உதயராசா. ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் பிரதித் தலைவர் கலாநிதி என்.குமாரகுருபரன், ஐக்கிய காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் ஏ.எம்.முபாரக், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் இ.தம்பையா உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
மேற்குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த மற்றும் நாடு சார்ந்த அரசியல் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
அடுத்த இரண்டு வாரங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் பின்னர் பரந்த மற்றும் ஜனரஞ்சகமான அரசியல் முன்னெடுப்பில் இறங்குவதற்கும் அவர்கள் இதன்போது ஒப்புக்கொண்டனர்.