தோட்டங்களுக்கு இராணுவத்தை கொண்டுவந்து தோட்ட மக்களை அடக்கி, அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதற்கு இடமளிக்கக்கூடாது என வீ.இராதகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், மலையகத் தோட்டப்பகுதியில் முதலாளிமார்களுக்கும் தொழிலாளர்களுக்கும் புதிதாக பிரச்சினை ஏற்பட்டு வருகின்றது. அதனால் முதலாளிமார் சங்கங்கள் தங்களின் பாதுகாப்புக்காக இராணுவத்தை கொண்டுவரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன் மூலம் தோட்டங்களுக்கு இராணுவத்தினரை கொண்டுவந்து தோட்ட மக்களை அடக்கி, அதன் மூலம் அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
அதனால், அவ்வாறான சூழலை உருவாக்காமல் இருக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன், தற்போதுள்ள நிலைமையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் அனைத்து பொருட்களின் விலை அதிகரிக்கப்படும். அதனால், அதிகம் பாதிக்கப்படப்போவது சாதாரண மக்களாகும். இந்த விடயத்தை கருத்திற்கொண்டு பெற்றோலிய அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு இன்னும் தீர்வு இல்லாமல் இருக்கின்றது. சர்வதேச ஆசிரியர் தினத்தில் அவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்
இதன்போது, சபையில் இருந்து அமைச்சர் ரமேஷ் பத்திரண, தோட்டங்களுக்கு இராணுவத்தினரை கொண்டுவரவேண்டும் என்ற எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இராணுவத்தினரை அந்த பிரச்சினைக்கு தலையிடவைக்க எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றார்.


