அராலியில் இராணுவத்தினர் இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உலாவித் திரிந்த இரு இராணுவத்தினரை பிரதேச மக்கள் மடக்கிப்பிடித்து வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அராலி தெற்கு பகுதியில் நேற்று இரவு அப்பிரதேசத்தை சேராத இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்து உள்ளனர்.

இதனை, அவதானித்த பிரதேச மக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். பிடிக்கப்பட்ட இருவரும் தாம் இராணுவத்தினர் என அடையாளப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், குறித்த இருவரும் இயக்கச்சி இராணுவ முகாமில் பணியாற்றி விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வட்டுக்கோட்டை பொலிசாருக்கு பிரதேச மக்கள் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிசார் குறித்த இருவரும் சந்தேகத்திற்கிடமாக கடமையற்ற பிரதேசத்தில் நடமாடிய அடிப்படையில் கைது செய்தமையோடு, அவர்கள் பயணித்த காரையும் கைப்பற்றினர்.

இராணுவ முகாமிற்கு தெரியாது இருவரும் அராலி தெற்கு பகுதிக்கு வருகை தந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக வட்டுக்கோட்டை பொலிசாரால் குறித்த இராணுவ முகாமுக்கு தெரியப்படுத்தபட்டதோடு, குறித்த இருவருக்கும் பொலிஸ் பிணை வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply