அரசாங்கத்தினால் பால் மாவிற்கான புதிய விலைகளை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவை 350 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவை 140 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மா பைக்கட்டின் விலை ஆயிரத்து 300 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா பைக்கட்டின் விலை 520 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், நிதி அமைச்சினால் ஏதேனும் வரி அறிவிக்கப்படும் பட்சத்தில், பால் மாவிற்கான விலை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கான விலையை பொலநறுவையைச் சேர்ந்த பிரபல அரிசி ஆலை உரிமையாளரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான டட்லி சிறிசேன குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. நாட்டின் அரிசி விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானிப்பதென்றால் அரசாங்கம் எதற்கு என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தன.
எனினும் தற்போதும் பால்மாவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில் அதன் விலையையும் பால்மா இறக்குமதியாளர்களே தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


