
உக்ரைன் போர் தொடர்பில், ரஸ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்களை ஐ.நா. பாதுகாப்பு சபையில் அது நிறைவேற்றாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துவதே ஆகும்.
அதுபோலவே, தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை விவகாரத்தினை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறலுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு கிட்டாது என பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற துணைச் செயலாளர் விக்கி வோட் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்திருந்தார்.
பிரித்தானியா உட்பட ஐந்து கூட்டு நாடுகளே ஐ.நா. மனித உரிமைச்சபையில் இலங்கை தொடர்பிலான 46/1 தீர்மானத்தினை முன்னெடுத்திருந்த நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் இக்கருத்து தமிழர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,
பிரித்தானியா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு புதிதல்ல. இதே நிலைப்பாட்டினை முன்னரும் ஒரு தடவை வெளிப்படுத்தியுள்ளது.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதில் முன்னிற்று உழைத்த பிரித்தானியா, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை பயன்படுத்த தயங்குவது, ஏமாற்றத்தையே தருகின்றது.
குறிப்பாக, சமகாலத்தில் உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானியா உட்பட மேற்குலகம் நாடுகள் ரஸ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்களை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்றுள்ளன.
பாதுகாப்பு சபையில் அது நிறைவேற்றப்படாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துவதே ஆகும்.
அதுபோலவே, தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை விவகாரத்தினை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன.
உக்ரைன் மக்களுக்கு ஒரு நீதி, தமிழ் மக்களுக்கு ஒரு நீதியா என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கை மனித உரிமை மீறல்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் கையாளப்படட்டும். ஆனால் இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் போர்க் குற்றங்களுக்குமான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை என்பது ஐ.நா. பாதுகாப்புச் சபையூடாகவே கையாளப்பட வேண்டியுள்ளது.
பொறுப்புகூறலுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த, இலங்கை விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லுங்கள். அப்போது நீதிக்கு எதிரானவர்கள் யார் என்பது தெரியவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2021 ஜனவரி 12ம் திகதி ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளரர் மிசேல் பசேலேற் அம்மையாரின் அறிக்கையில்,
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு விடுத்திருந்ததோடு, ஐ.நா. மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் ஆணையாளர்கள், ஐ.நாவின் நான்கு முன்னாள் உயர் அதிகாரிகள், இலங்கைக்கு பயணம் செய்து அறிக்கைகளை எழுதிய ஐ.நாவின் ஒன்பது முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள், ஐ.நா. செயலாளர் நாயகம் குழுவின் மூன்று உறுப்பினர்கள், இலங்கை பற்றிய நிபுணர்கள் ஆகியோர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு என்ற அழைப்பை விடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்