ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமா தற்போது ஆட்சியில் உள்ளது என்பது சந்தேகத்துக்குரியது. ராஜபக்க்ஷர்கள் மீது நம்பிக்கை கொண்ட மக்களை ஒருபோதும் கைவிட போவதில்லை.
ராஜபக்க்ஷர்களினால் பிரபல்யமடைந்தவர்களே அரசாங்கத்தை பலவீனப்படுத்தி முழு நாட்டையும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
இந்த நம்பிக்கையின் காரணமாகவே கூட்டணியில் எம்முடன் ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கினார்கள்.
அதே போல் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் ஆதரவு வழங்கினார்கள்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினால் பிரபல்யமடைந்தவர்கள் தற்போது துரதிஷ்டவசமாக அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டு நாட்டை முழுமையாக நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளார்கள்.
தற்போது நாட்டில் அரசாங்கம் என்பதொன்று உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினரும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுபவர்களும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
இந்த அரசாங்கம் பொதுஜன பெரமுன தலைமையிலானதா என்ற சந்தேகம் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்