கதிர்காம யாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதையை ஜூலை 22 ல் திறக்க ஏற்பாடு; டக்ளஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம்!
-/அரவி வேதநாயகம்
கதிர்காம யாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதையை எதிர்வரும் 22 ம் திகதி திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பாரை மாவட்ட அரச அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று (01) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
எதிர்வரும் 22ம் திகதி உகந்தை முருகன் ஆலயத்தில் காலை 6 மணிக்கு இடம்பெறும் பூசை வழிபாடுகளை தொடர்ந்து காலை 7 மணிக்கு உத்தியோக பூர்வமாக காட்டுவழிப்பாதை யாத்திரிகர்களுக்காக திறந்துவிடப்பட இருக்கின்றது. அன்றைய தினம் பி.ப 3 மணிக்கு மூடப்படும் பாதை தொடர்ந்து வரும் 14 நாட்கள் அதாவது ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி வரை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 3 மணிக்கு மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், பொத்துவில், லாஹூகல, ஆலயடிவேம்பு ஆகியவற்றின் பிரதேச செயலாளர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் பிரதிநிதி, வன இலாகாவின் பிரதிநிதி, பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, லாஹூகல பிரதேச சபையின் பிரதிநிதி, நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பிரதிநிதி, மொணறாகலை மாவட்ட செயலகத்தின் பிரதிநிதி ஆகியோருடன் வண. விகாராதிபதி, உகந்தை ஆலய பிரதம குரு என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேலதி அரசாங்க அதிபர் ஜெகதீசன் நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், எரிபொருள் மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருக்கின்றபோதும் யாத்திரிகர்களின் தேவைகளை பூர்த்திசெய்கின்ற வகையில் திணைக்களங்கள் அர்ப்பணிப்பான சேவையை வழங்க முன்வந்திருப்பதாகவும் யாத்திரிகர்கள் குடிநீர் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்தி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



