ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றார்.
ராணியின் மகனான 22 வயதுடைய இளைஞர் நிரோஷன்,பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள நண்பர்களுடன் இணைந்து, செல்போனில் கேம் விளையாடி பொழுதைக்கழித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராணி தனது மகனை கேம் விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது.
தாயின் கண்டிப்பால் மனம் உடைந்த நிரோஷன், தனது வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தண்ணீரில் கலந்து வீட்டிற்கு பின்புறம் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு படுத்து கிடந்துள்ளார்.
மயக்க நிலையில் இருந்த நிரோஷனை அவரது நண்பர்கள் மீட்டு மண்டபம் முகாமில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் தனியார் வாகன மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உள் நோயாளியாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு வரும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்
இது குறித்து நிரோஷனின் சகோதரி பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.