கந்தக்காடு விவகாரம்: விசாரணை அறிக்கை திங்கள் சமர்ப்பிப்பு

கொழும்பு, ஜுலை 02

கந்தக்காடு, புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை, எதிர்வரும் திங்கட்கிழமை தமக்கு கிடைக்கப்பெறும் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய 4 பேர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற மோதல் நிலை குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு நேற்று அங்கு சென்றிருந்தது.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பிலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும், விசாரணைகளை முன்னெடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெருமளவானோர் தப்பிச் சென்றிருந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில், 667 பேர் மீளவும் பொறுப்பேற்றப்பட்டதுடன், 57 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர். பொலிஸார், இராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்து வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மீண்டும் பொறுப்பேற்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *