
ராமநாதபுரம்- ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் விபரீதமுடிவு எடுத்து உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்தவர் நிரோஷன்(வயது-22) என்ற இளைஞராவார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு இளைஞர் உள்ளிட்ட அவரின் குடும்பம் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்குச் சென்று மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக இளைஞர் வேலைக்குச் செல்லாமல், நண்பர்களுடன் சேர்ந்து கேம் விளையாடி வந்துள்ளார்.
இதனால் இளைஞரின் தாய், அவரை கேம் விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தாயின் கண்டிப்பால் மனமுடைந்த இளைஞர் வீட்டிலிருந்த எலி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து வீட்டுக்குப் பின்புறம் படுத்துக் கிடந்துள்ளார்.
மயக்க நிலையில் இருந்த இளைஞனை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
அத்துடன் உயிரிழந்த இளைஞரின் சகோதரியால் அவரின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.