கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டு வழிப்பாதை இம்மாதம் 22ஆம் திகதிதிறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மூடப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.எ.டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கதிர்காமம் மற்றும் உகந்தை முருகன் ஆலயங்களின் கொடியேற்றம் இம்மாதம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கடந்த இரு வருடங்களாக கோவிட் தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த பாத யாத்திரை இந்த வருடம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் யாத்திரை தொடர்பாக உகந்தை முருகன் ஆலயத்தில் நேற்று(01) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
அரச திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துக்கொண்ட இந்த உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கதிர்காம பாத யாத்திரைக்கான குமண ஊடான காட்டு வழிப்பாதை இம்மாதம் 22ஆம் திகதி காலை உகந்தை முருகன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜையை தொடர்ந்து 7 மணியளவில் திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மூடப்படும் எனவும் இக்காலத்தில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்படும் பாதை பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாத யாத்திரிகளுக்கான பாதுகாப்பு, சுகாதார சேவைகள், குடிநீர் வசதி போன்றவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாதயாத்திரிகர்கள் சூழலை மாசுபடுத்தும் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள உதவிகளை பாத யாத்திரிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்





