இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பில் கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினனை, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்திருக்கின்றார்.
இதன்போது, ஒன்ராறியோ சட்டமன்றத்தில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்ட குறித்த தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
குறித்த சட்டம் ஒன்ராறியோ மேல் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பல தசாப்த கால மோதலைத் தொடர்ந்து, சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்வதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதும் நினைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு கனேடிய உயர்ஸ்தானிகர் பதிலளிக்கையில்,
ஒன்ராறியோ சட்டமன்றத்தின் தீர்மானமான இந்த விடயமானது, அரசியலமைப்பு சார்ந்த கேள்வி என்ற வகையில் நீதித்துறையின் செயற்பாட்டில் உள்ள நிலையில் அதன் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சருக்கு தெரிவிக்க இணங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


