22வது திருத்தச்சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது! முன்னாள் ஜனாதிபதி

புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தின் ஊடாக 19வது திருத்தச்சட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அரசாங்கம் கூறினாலும் தற்போது முன்வைத்துள்ள திருத்தச்சட்டம் 19வது திருத்தச் சட்டத்திற்கு முற்றிலும் மாறான திரிபுப்படுத்தப்பட்ட திருத்தம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

உத்தேச 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமான திருத்தச்சட்டம் என தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரங்களை குறைப்பது, நாடாளுமன்றத்தை வலுப்படுத்தும் திருத்தச்சட்டத்தை மக்கள் எதிர்பார்த்தனர். எனினும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.

இதனால், இப்படியான திருத்தச்சட்டத்திற்கு எந்த வகையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு கிடைக்காது.

அது மாத்திரமின்றி அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத முயற்சிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

அத்துடன் 22வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லவும் தீர்மானித்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் எந்த பதவியை பெற்றுக்கொள்ளவும் தயாரில்லை.

மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் எதற்கும் தீர்வை காண தற்போதை அரசாங்கம் தவறியுள்ளது. இதனால், அரசாங்கம் உடனடியாக பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும்.

மக்களின் நெருக்கடிகளை தீர்க்க வேண்டுமாயின் உடனடியாக சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். அப்படியான அரசாங்கத்தில் பங்காளியாக சுதந்திரக்கட்சி தயாராக இருக்கின்றது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *