‘என் அன்பே! என்னை மறந்து வேறு திருமணம் செய்யுங்கள்’ பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த பெண்ணின் இறுதிக் கடிதம்

‘என் அன்பே, எனக்கு அவ்வப்போது வரும் இந்த நோய் உங்களுக்கும் வரலாம். அதனால் நீங்கள் என்னை மறந்து வேறு திருமணம் செய்துகொள்ளுங்கள். எனக்கு எந்த கோபமும் வராது’

இப்படி கடிதம் எழுதி வைத்து விட்டே, இளம் தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் ஏரியில் குதித்து உயிர்மாய்த்துள்ளார்.

கடந்த வாரம், எம்பிலிபிட்டிய பகுதியிலுள்ள சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் குதித்த இளம் தாயே இந்த கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.

வாவியில் குதித்த சுரங்கிகா மதுமாலி (32), அவரது 5 வயது மகன் ஆகியோர் உயிரிழந்தனர். 11 வயது மகன் நீந்திக் கரை சேர்ந்தார்.

அந்த பெண் உயிரிழப்பதற்கு முன்பாக தனது கணவரிற்கு எழுதி வைத்த கடிதம் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த பெண் உளநல சிக்கலிற்கு உள்ளாகி, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும் சிகிச்சைக்கு சென்று வந்தார்.

கணவர் பிரேமதிலகவும் அவரும் காதலித்து 12 வருடங்களின் முன்னர் திருமணம் செய்திருந்தனர். மிகவும் அன்னியோன்யமான தம்பதியாகவும் இருந்து வந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியால், வாழ வழியின்றி பிள்ளைகளுடன் அவர் வாவியில் குதித்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த போதும், அது தவறான செய்தியென்பது தற்போது தெரிய வந்துள்ளது.

அவரது கணவரிற்கு சொந்தமான பெரிய மாட்டு பண்ணையொன்று உள்ளது. மனைவி உயிரிழப்பதற்கு சில நாட்களின் முன்னதாக, தமது பகுதி விகாரை புனரமைப்பிற்காக ஒன்றரை இலட்சம் ரூபா வழங்கியுள்ளனர்.

எனினும், சில காலமாக மதுமாலி உளநல சிக்கலிற்கு உள்ளாகியுள்ளார்.

தனது உளநல சிக்கல்களால் கணவன் பாதிக்கப்படுவதாகவும், அவரை வேறு திருமணம் செய்யுமாறும், அதனால் தனக்கு எந்த கோபமும் இல்லையென்றும் கூறி வந்துள்ளார். எனினும், கணவன் அதை கருத்திலெடுக்கவில்லை.

அவர்களது இரண்டு மகன்களும் சூரியவெவ உயர்தரப் பாடசாலையில் 7ஆம் மற்றும் 1ஆம் தரங்களில் கல்வி கற்று வருகின்றனர்.

சம்பவ தினத்திலன்று பிரேமதிலக வியாபார நிமித்தமாக சூரியவெவ நகருக்குச் சென்றிருந்தார்.

பிரேமதிலகவின் சகோதரனின் குடும்பத்தினர் தமது பிள்ளைகளிற்கும், மதுமாலி தனது இரண்டு பிள்ளைகளிற்கும் முடிவெட்டுவதற்காக சூரியவெவவில் இருந்து புறப்பட்டு எம்பிலிப்பிட்டிய செல்லும் பேருந்தில் சென்று சந்திரிகா வாவி பகுதியில் இறங்கியுள்ளனர்.

மதுமாலி அங்கிருந்த கடையொன்றில் தனது சிறிய மகனிற்கு விளையாட்டு உபகரணம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

பின்னர் வாவிக்கரையில் புகைப்படம் எடுத்தனர். மதுமாலி தனது சிறிய மகனை தூக்கி வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

புகைப்படம் எடுத்த 10 நிமிடங்களில் தனது இரண்டு பிள்ளைகளுடனும் வாவியில் குதித்துள்ளார். கூடச் சென்றவர்கள் உதவிக்குரல் எழுப்ப அந்த பகுதியில் மக்கள் ஒன்று சேர்ந்தனர்.

வாவியில் தள்ளப்பட்ட 11 வயது மகன் நீந்திச் சென்று அருகிலிருந்த பாறையொன்றை கட்டிப்பிடித்துக் கொண்டார். மதுமாலியும், 5 வயது மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அதன் பின்னரே மதுமாலி தனது கணவரிற்கு எழுதி வைத்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *