ரூ.19 கோடி பெறுமதியான தங்கம், வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது

கொழும்பு, ஜுலை 04

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் 19 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் வெளியேற முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 கோடி பெறுமதியான எட்டரை கிலோ கிராம் நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள்  அமெரிக்க டொலர்கள்  75,000  மற்றும் யூரோ 18,000 என்பவற்றை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு விமான நிலையத்தில் உள்ள புறப்படு முனையத்தில் தங்கியிருந்த வர்த்தகர்கள் மற்றும் கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் வெளியேற முயற்சித்துள்ளனர்.

அதன்படி, நேற்று இரவு துபாயில் இருந்தும்  புதுடெல்லி இருந்தும் வந்த இந்தியன் விமானம் மூலம் இந்த நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 53 மற்றும் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் எனவும் இருவரும் இரு நாட்டு விமான நிலையங்கள் ஊடாக தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கடத்தி வருவதாகவும் 46 வயதுடைய மற்றைய நபர் தொடர்ச்சியாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அடிக்கடி வருபவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *