கரும்புலிகள் தினத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல்- அரசாங்கத்தின் சதி என்கிறார் அனுர

கரும்புலிகள் தினத்தில் வெடிகுண்டுத்தாக்குதல் நடத்தப்படலாம் எனும் செய்தியின் உண்மையை அரசாங்கம் உடனடியாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கமே இவ்வாறான செய்பாடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கமானது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நாட்டை மீண்டும் குழப்ப முயற்சித்து வருகிறது.

2022 ஜுன் 27 ஆம் திகதி, பாதுகாப்புச் செயலாளரான கமால் குணரட்னவுக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 29 ஆம் திகதி பாதுகாப்புச் செயலகத்திற்கு இந்தக்கடிதம் கிடைத்துள்ளது.

இந்தக் கடிதத்தில் ஜுலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ள கரும்புலிகள் தினத்தை இலக்கு வைத்து, வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்று வடக்கில் அல்லது தெற்கில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோர் மற்றும் வி.ஐ.பிக்களுக்கு எந்தவொரு நிகழ்விலும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பொன்றின் ஊடாக வெடி குண்டு தாக்குதல் நடத்தப்படலாம் எனும் செய்தியை பொலிஸ் மா அதிபர் ஊடாக, பாதுகாப்புச் செயலாளருக்க அரசாங்கம் தெரியப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்கம் உடனடியாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தத் தகவலானது யார் ஊடாக கிடைத்தது? இந்த செய்தி உண்மையா? என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

இதனை அரசாங்கம் செய்யத் தவறினால், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை திசைத்திருப்பவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சந்தேகிக்கப்படும்.

எனவே, இந்த வெடிகுண்டு அச்சுறுத்தலும் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாக இருக்குமோ எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமையால், மீளவும் அதிகாரத்தைக் கைப்பற்ற எதையும் செய்யக்கூடிய நிலையில்தான் இந்த அரசாங்கம் உள்ளது. மக்களும் இதுதொடர்பாக அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என அவர் மேலம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *