கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் தமக்கு இன்று கிடைத்ததாக அமைச்சர் தமது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், அன்றைய தினம் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளது.
அன்றைய தினம் நீர்மின் உற்பத்தி செய்ய முடியும் என்ற போதிலும் எரிபொருள் நிலைய செயற்பாடுகளுக்காக 320 மில்லியன் ரூபாவை செலவழிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உரிய பரிந்துரைகளை உள்ளடக்கி அமைச்சருக்கு சமர்ப்பித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த சம்பவங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்துமாறு இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் நிர்வாகத்திடம் ஜூன் 10ஆம் திகதி அறிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களது விசாரணைகளுக்கு உதவுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றம் சுமத்தப்பட்டவர்களை தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்