
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கும் ஆயுத படையினர் அல்லது பொலிஸாருக்கும் இடையில் ஏற்படும் மோதல்களிளால் பாரதூரமான பின்விளைவுகள் ஏற்படலாம் என ஜனாதிபதிக்கு இன்று அனுப்பியுள்ள கடிதமொன்றில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த நிலைமையை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அச்சங்கம் கோரியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சாலிய பீரிஸ், செயலாளர் இசுறு பாலபட்டபெந்தி ஆகியோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விரக்தியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் வரிசைகளில் காத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வரிசைகள் பல கிலோமீற்றர்களுக்கு நீண்டுள்ளன.
உடனடி தீர்வு தென்படாத இந்த விரக்கதியினால் எரிபொருள் நிலையங்களில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமையிலான உடனடியாக ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
தற்போதைய சூழ்நிலையானது பொதுமக்கள் அங்கத்தவர்களுக்கும் ஆயுத படையினர் அல்லது பொலிஸாருக்கும் இடையில் பெருந்தீயை ஏற்படுத்தக்கூடும்.
சில வருடங்களுக்கு முன்னர், பொதுமக்களுக்கும் ஆயுத படையினருக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக மரணங்கள் ஏற்பட்டன.
ஆயுத படைகள் அல்லது பொலிஸார் மற்றும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இத்தகைய சம்பவங்களானவை இலங்கையின் ஆயுதபடையினர் மற்றும் பொலிஸாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எனவும் அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் நிலைமை தணிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்புச் செயலாளருக்கும் முப்படைத் தளபதிகளுக்கும் அறிவுறுத்தல்களை விடுக்குமாறு நாம் கோருகிறோம்.
இவ்விடயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என நாம் நம்புகிறோம். இல்லாவிட்டால் முன்னெப்போதும் இல்லாத குழப்பமும் தீங்கும் ஏற்படலாம்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள இச்சூழ்நிலைக்கு இறுதியான தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கருதுவது என்னவென்றால், பொதுமக்களிடம் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதும், நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலையங்களில் சமத்துவமானதும் வினைத்திறனானதுமான எரிபொருள் விநியோக முறைமையை உறுதிப்படுத்துவதுமாகும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்