அனைவரும் ஒன்றிணையாவிடின் நாடு மீளெழ முடியாது நாசமடையும்! சஜித் எச்சரிக்கை

“கடந்த 3 ஆண்டுகளில் இந்நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்காமல், தாங்கள் மாத்திரம்தான் சரி என்று எண்ணிச் செயற்பட்டமையால் நாடு தற்போது பெரும் பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டும். இல்லையேல் நாடு மீளெழ முடியாதவாறு நாசமடைந்து போகும்.”

  • இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பாரிய வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ‘தேசிய மறுசீரமைப்பு மற்றும் அடுத்தகட்ட பயணம்’ என்ற வேலைத்திட்டத்தின் தீர்மானமிக்க கூட்டம் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வாதிகாரம் இன்றி அனைவரது கருத்துக்களுக்கும் செவிசாய்க்கும் சமூக சீர்திருத்தத்தின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். அதற்காக முற்போக்குக் கட்சிகளின் முன்மொழிவுகளையும் யோசனைகளையும் செவிமடுக்கின்றோம்.

பன்முகப்படுத்தப்பட்ட யோசனைகளை ஒன்றிணைக்கக்கூடிய பொதுவான தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இறுதியில் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே எதிர்க்கட்சியின் நோக்கமாகும். அந்த நிகழ்ச்சி நிரலின் ஊடாக நாட்டு மக்கள் இழந்த மூச்சை மீண்டும் வழங்க முடியும்” – என்றார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார, சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சி.வி.விக்னேஸ்வரன், பி.திகாம்பரம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன், ஜனரஞ்சன, காமினி வியங்கொட, ரொஹான் சமரஜீவ உள்ளிட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *