
இராணுவ அதிகாரியொருவர் குடிமகன் ஒருவனைக் காலால் எட்டி உதைத்ததைப்போன்று, குடிமகன் ஒருவன் இராணுவ அதிகாரியொருவரை காலால் எட்டி உதைந்தால் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை எவ்வாறு செயற்படும்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், பொதுமக்கள் சார்ந்த விவகாரங்களில் இராணுவத்தினர் தலையிடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இராணுவ அதிகாரியொருவர் அவரது காலால் இளைஞர் ஒருவரின் எட்டி உதைக்கும் காட்சி அடங்கிய காணொளி நேற்றைய தினம் பேஸ்புக், டுவிட்டர், வட்ஸப் உள்ளிட்ட சமூகவலைத்தளப்பக்கங்களில் அதிகமாகப் பகிரப்பட்டதுடன், அதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தமது கோபத்தையும் அதிருப்தியையும் விமர்சனங்களையும் வெளியிட்டனர்.
அந்தவகையில் இச்சம்பவம் குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
‘இவர் இராணுவ அதிகாரியா? அல்லது இராணுவ குண்டரா? ஒரு குடிமகன் ஒரு இராணுவ அதிகாரியை நோக்கி இத்தகைய செயலைச் செய்தால், அந்தக் குடிமகனின் நிலையென்ன? அதன்போது ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை எவ்வாறு தொழிற்படும்? பொதுமக்கள் சார்ந்த விவகாரங்களில் இராணுவத்தினர் தலையிடக்கூடாது.
சட்டத்தை நிலைநாட்டுவதில் அவர்கள் தலையிடக்கூடாது. மாறாக அவர்கள் இராணுவத்தினருக்குரிய கட்டடத்திலேயே இருக்கவேண்டும்’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
பிற செய்திகள்