மன்னாரில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எரிபொருள் கோரி போராட்டம்!

மன்னார் தனியார் பேருந்து சங்கத்தினர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் தனித்தனியாக எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்தை மேற்கொள்ள காத்திருந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

மன்னார் டிப்போவுக்கு வழங்கப்பட்ட 13200 லீற்றர் டீசலில் மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க பேருந்துகளுக்கும் வழங்குமாறு உரிய தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் வழங்கப்பட்ட 13200 லீற்றர் டீசலில் தற்போது வரை 2413 லீற்றர் டீசல் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்டது.எனினும் அதனை தொடர்ந்து டீசல் எவையும் தனியார் பேருந்துகளுக்கு வழங்கவில்லை.

தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் மன்னார் டிப்போ அதிகாரிகளிடம் டீசல் கோரிய போதும் வழங்கப்படவில்லை.இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனியார் பேருந்துகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதோடு,அரச போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடியாத வகையில் தனியார் பேருந்துகளினால் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு தமக்கான எரிபொருளையும் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

இதனால் போக்குவரத்துச் சேவைகள் சிறிது நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டதோடு, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர்,இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள், கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கை போக்குவரத்து சபையின் எண்ணைக் குதங்களில் இருந்து தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு டீசல் வழங்குவது என்ற அரச நிலைப்பாட்டிற்கு அமைய மன்னார் சாலைக்கு 6600 லீற்றர் டீசல் வருமாக இருந்தால் அவற்றில் 2500 லீற்றர் டீசலையும்,13,200 லீற்றர் டீசல் வருமாக இருந்தால் 5000 லிட்டர் டீசல் தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு வழங்குவது என குறித்த கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் முன்னெடுத்த பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை மன்னாரில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகள் தமக்கு உரிய முறையில் எரிபொருளை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *