கர்ப்பிணி தாய்மாரின் எரிபொருள் வரிசையில் அடாவடியாக புகுந்த பொலிஸார்! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இன்று பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.

அதன்படி, பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரும் அரச ஊழியர்கள் நேற்று தொடக்கமும் வரிசையில் நின்று பெட்ரோலை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,திடீரென 20ற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னுக்கு சென்று பெட்ரோல் நிரப்புவதற்கு முற்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த பொலிஸார் பெட்ரோல் நிரப்புவதற்கு வந்திருந்த பொலிஸாரை முன்னே அழைத்துச் சென்று எரிபொருள் நிரப்புவதற்கு வழி அமைத்துக் கொடுத்துள்ளனர்.

அதற்கு பின்னர் வந்த பொலிஸார் கர்ப்பிணி தாய்மாரின் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பி சென்றனர்.

இதற்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் பொலிஸாருக்கு பூரணமான அனுமதியை வழங்கியதுடன் விரைவில் அவர்களுக்கு பெட்ரோலையும் வழங்கி உள்ளனர்.

அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் “ஊடகவியலாளர்களுக்கு விசேடமான ஒதுக்கீடு ஏதாவது உள்ளதா?” என எரிபொருள் நிரப்பும் ஊழியரை வினவிய வேளை, “ஊடகவியலாளர்களுக்கு செருப்பால் தான் அடித்து அனுப்புவோம்” எனப் பதில் அளித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அவதானித்துக் கொண்டிருந்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தினரதும், அத்துமீறி பெட்ரோலை பெற்றுச் சென்ற பொலிஸாரின் செயற்பாடுகளையும் அவதானித்த மக்களும் அரச உத்தியோகத்தர்களும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *