
யாழ்ப்பாணம் – வடமராட்சி கடற்பரப்பின் ஊடாக சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் நால்வர் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி – தொண்டமனாறு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (06) அதிகாலை 1.00 மணியளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்த தலா இருவர், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொண்டமனாறு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அண்மையாக உள்ள பகுதியில் இன்று அதிகாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் இராணுவத்தினர் விசாரணை நடத்திய போதே அவர்கள் படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தெரியவந்தது.
அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாற்காக தலா 3 லட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.