
கொழும்பு,ஜுலை 6
வெளிநாடுகளில் பணிபுரிய சென்றவர்கள் சட்டபூர்வமாக குறிப்பிடத்தக்களவு டொலர்களை இலங்கைக்கு அனுப்பியிருந்தால் மாத்திரமே, அவர்களுக்கு இரண்டாவது தடவை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்ல அனுமதி வழங்குவதற்கான சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒருவர் இரண்டாவது தடவை வெளிநாடு செல்வதற்கு பதிவு செய்யும்போது, அவர் முதல் தடவை சட்டபூர்வமாக இலங்கைக்கு அனுப்பிய டொலர் தொகை ஆராயப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு தாதிகளாக பணியாற்றச் செல்லும் யுவதிகளுக்கு விமானப் பயணச்சீட்டுகளை வழங்கும் நிகழ்வு தொழில அமைச்சில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.
வெளிநாடுகளில் பணிபுரிந்த பின் இலங்கைக்கு வருபவர்கள் கொண்டுவரும் டொலர் தொகைக்கு ஏற்ப மின்சார வாகனம் இறக்குமதி செய்வதற்கு வாய்பபு வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
அவர்கள் விமான நிலையத்தின் தீர்வையற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும்போது வழங்கப்படும் வரிச்சலுகையை அதிகரிக்கப்படும் எனவும், வீடு நிர்மாணம், சுயதொழில் முயற்சிகள் போன்றவற்றில் சலுகைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.