
வாழைச்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஓட்டமாவடி – 01, சீனிப்போடியார் வீதியிலுள்ள வீடொன்றில், நேற்று (5) காலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
வீட்டு முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்த பெற்றோலை திருடிச் செல்லும் நோக்கில் திருடன் ஒருவன் அங்கு சென்றுள்ளான்.
இந்த நிலையில், பெற்றோலை திருடும் போது வெளிச்சத்தை ஏற்படுத்த எண்ணி சிகரெட் லைட்டரை பயன்படுத்திய நிலையில், மோட்டார் சைக்கிள் தீப்பற்றியுள்ளது.
இதை தொடர்ந்து வீட்டின் கூரை மற்றும் கதவு என அனைத்து பொருட்களும் தீப்பற்றி எரிந்துள்ளன.
குறித்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றிய நிலையில், அதனை அணைப்பதற்காக தண்ணீர் என்று நினைத்து வாளியொன்றிலிருந்த பெயின்ட் பூசும் டின்னரை ஊற்றியுள்ளான்.
இதன் போது மோட்டார் சைக்கிள் வேகமாகத் தீப்பற்றியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு தீப்பற்றிய போது மோட்டார் சைக்கிள் எரிகிறது எழும்புங்கள் என்று கூக்குரல் ஒன்று கேட்டதாகவும், தாம் எழுந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்