திருகோணமலை உணவுப் பாதுகாப்பு தொடர்பான விசேட கூட்டம் இன்று (06) மாவட்ட செயலகத்தில் மேலதிக அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாவட்ட மக்களின் உணவுத் தேவைப்பாடு, உணவு உற்பத்தி, நுகர்வு நடத்தை உள்ளிட்ட விடயங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் உலக உணவுத் திட்டம் , உலக உணவு விவசாய தாபனம் ஆகிய நிறுவனங்கள் தேசிய ரீதியாக மாவட்ட அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் துறைசார் தகவல்களை பெற்று அதனை பகுப்பாய்வு செய்து வருகின்றது.
அதனையடிப்படையாக கொண்டு மக்களுக்கு எவ்வாறு இந்நெருக்கடியில் உதவிசெய்ய முடியும் என்பதனே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.
மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளுள் நெல் விவசாயம் கடந்த போக அறுவடையை பார்க்கிலும் இம்முறை குறைவடைந்துள்ளது.
இதற்கு பசளை உட்பட பல காரணங்கள் ஏதுவாக அமைந்துள்ளன.
மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக சிறு போகத்தில் 24520 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறிய, நடுத்தர நீர்ப்பான குளங்கள் மற்றும் மழைமூலம் பயிர் செய்யப்பட்ட நெல்வேளாண்மை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
ஏக்கருக்கான சராசரி அறுவடை 20 பேக் என்றடிப்படையில் தற்போது காணப்படுகின்றது.
இருப்பினும் ஏக்கருக்கான உற்பத்தி செலவு மற்றும் அறுவடை செலவு முன்னரைவிட மிக அதிகமாக காணப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் அவற்றின் உற்பத்தி நிலவரம், எரிபொருள் தொடர்பான விடயங்களும் இதன்போது ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாயப்பணிப்பாளர் எம். குகதாசன் ,ஐக்கிய நாட்டின் உணவு விவசாய தாபனத்தின் ஆலோசகர் கார்லோஸ், உலக உணவுத் திட்டதிட்டத்தின் ஆலோசகர் தே. விக்னேசன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.விஜயதாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


பிற செய்திகள்