
அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, இலங்கைக்கு எதிர்வரும் 10 மற்றும் 15 ஆம் திகதிகளுக்குள் வரவிருந்த பெட்ரோல் கப்பல்கள், தமது வருகையை உறுதிப்படுத்தவில்லை என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல்கள் வரவில்லையெனில், எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதியன்று ஐ.ஓ.சி நிறுவனத்தின் கப்பல்கள் மூலம் மாத்திரமே பெட்ரோலை இலங்கைக்கு தரக்கூடியதாக இருக்கும்.
பெட்ரோலை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள நாணயக்கடிதம் விநியோகிக்கப்பட்டபோதும், வங்கி தரமிறக்கல் காரணமாக இந்த கப்பல் இலங்கைக்கு வர மறுத்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
மலேசியாவின் நிறுவனம் ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதியன்று பெட்ரோலை இலங்கைக்கு எடுத்து வர இணங்கியுள்ளது. எனினும் வழமையான விலையை விட அதிக விலைக்கே பெட்ரோலை வழங்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
மலேசியா நிறுவனத்திடம் அதிக விலைக்கு பெட்ரோலை 13ஆம் திகதியன்று கொள்வனவு செய்வதா? அல்லது 22 ஆம் திகதி ஐ.ஓ.சி நிறுவனத்தின் கப்பல் வரும் வரை பெட்ரோல் இல்லாமல் இருப்பதா? என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களே தீர்மானிக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்





