பெருந்தோட்டங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான தரிசு நிலங்களில் விவசாயத்திற்கு உகந்தவற்றை உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களுக்கு விவசாயம் செய்ய பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனி நிர்வாகங்கள் வழிவிட வேண்டுமென பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா முக்கியஸ்தருமான டி.வி.சென்னன் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம், தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; நாட்டில் நாளுக்கு, நாள் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும் என்று கருதி நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியிருந்தார்.
இருப்பினும், தோட்டத் தொழிலாளர்களுக்கு தரிசு நிலங்களை பகிர்ந்தளிக்க கம்பனி நிர்வாகங்கள் தொடர்ந்தும் தயக்கம் காட்டி வருவதுடன், தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முனையும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகித்து சட்ட நடவடிக்கைக்கைகளை மேற்கொண்டும் வருகின்றன.
தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களில் இராணுவ முகாம் உட்பட ஏனைய அரச சார்பான நிர்மாணப் பணிகளை அமைக்க அனுமதி வழங்கும் கம்பனி நிர்வாகங்கள், நாட்டின் அந்நிய செலாவணிக்கு முதுகெலும்பாக விளங்கிவரும் தொழிலாளர்கள் விடயத்தில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் இவ்விக்கட்டான நிலைமையிலும் செயற்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.
மேலும் நாளாந்தம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனக்கூறப்பட்டாலும் தோட்ட நிர்வாகங்கள் வழங்கும் வேலை நாட்கள், உட்பட பல்வேறு சூட்சும நடைமுறைகள் காரணமாக தொழிலாளர்கள் மாதாந்தம் 10ஆயிரத்திற்குட்பட்ட சம்பளத்தையே பெறுகின்றனர்.
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் 60 வீதமாக உயர்ந்துள்ள நிலையில் இச்சம்பளம் தொழிலாளர்களது வாழ்க்கையை கொண்டு நடத்த சிறிதளவேனும் போதுமானதாக இல்லை.
எனவே, ஓரிரு மாதங்களில் ஏற்பட போகும் தீவிர பொருளாதார இடர்நிலையில் இருந்து ஓரளவாவது மலையக மக்கள் விடுபட அவர்களது விவசாய நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக தரிசு நிலங்களை தாமதியாது பகிர்ந்தளிக்க வேண்டும். இந்நடவடிக்கைக்காக அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு குரல்கொடுத்து கம்பனி நிர்வாங்களை பணிய வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்