
கொழும்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றி வளைப்பது, மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில், தெருக்களுக்கு வந்த அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்க்கட்சிகள், காலிமுக போராளிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் எதிரணி கட்சிகள் சார்பில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள முழு அடைப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக பங்கு பெறும்.
இதன்படி மலையக தோட்டங்களில் அன்றைய தினம் பணிகளில் ஈடுபடாமல், அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படி மலையக தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்ட வதிவாளர்களை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம்.
அதேபோன்று கொழும்பு உட்பட நகரங்களில் வர்த்தக நிலையங்களையும், அலுவலகங்களையும் மூடி, முழுமையாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படியும், தமது வேலைத்தள பணியாளர்களையும், அரசு எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துகொள்ள இடமளிக்கும்படியும் அனைத்து தரப்பினரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம் என தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்