கல்முனை வடக்கு பிரதேச நிருவாகத்தில் அத்துமீறி செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும் – கலையரசன் எம் பி
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக செயற்பாடுகளில் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் அத்துமீறி ஈடுபடுவது சட்ட விரோதமான செயலாகும் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என த. தே. கூ நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது இந்த நிலையிலும் கல்முனையில் அரச காணிகள் அபகரிப்பு இடம்பெறுகிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கல்முனை 01 C கிராம சேவகர் பிரிவில் உள்ள நீரேந்து பகுதியான சுமார் மூன்று ஏக்கர் குளத்தினை தனியார் மண் மூடி மதில் அமைக்கும் செயற்பாடு இடம்பெறுகிறது. இதற்கு உறுதுணையாக கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் உள்ளார். குளங்கள்,நீரேந்து நிலங்கள் அரச காணிகளை தனியார் அபகரிக்க முடியாது, குளங்களை மண் நிரப்பி மூட முடியாது எனும் பொதுவான நடைமுறை இலங்கையில் இருந்தும் கூட கல்முனையில் இந்த காணிக்கு கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் கல்முனை வடக்கு பிரிதேச செயலக அதிகாரத்தை மீறி தனியாருக்கு அனுமதி அளித்துள்ளார் என்றார்.