அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் பதிலாக பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் 22வது திருத்தத்தை கொண்டு வருவதற்கு தேவையற்ற அவசரம் குறித்தும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை ஒரு வங்குரோத்து நாடாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பிரதமர் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் அறிவித்ததை அடுத்து வீரசேகர இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பிரதமர் மற்றும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஐ.தே.க தலைவர் தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது போல் தெரிகிறது.
பிரதமர் விக்ரமசிங்க தனது முன்னுரிமைகளையும் நாட்டின் முன்னுரிமைகளையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
அரச காணிகளை உரிமைப் பத்திரம் வழங்கும் போர்வையில் தனியார் மயமாக்கும் பாசாங்குத்தனமான முயற்சியை விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகிறார்.
நல்லாட்சி அரசாங்கம் அமெரிக்காவுடனான MCC உடன்படிக்கையில் இணைந்து கொள்வதற்கு முன்னைய முயற்சிகளின் பின்னணியில், அரசாங்க காணி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.
என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் தாம் அமைதியாக இருக்கப் போவதில்லை.
அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கும் அரச காணிகளை தனியார் மயமாக்குவதற்கும் முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் விக்ரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதை தாம் எதிர்த்த போதிலும், நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர் அதனை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசேகர குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்கும் அளவிற்கு சென்றதாக எம்.பி வீரசேகர குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பொருளாதாரத்தை உயர்த்தும் ஐ.தே.க தலைவரின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், பிரச்சினை என்னவென்றால், விக்கிரமசிங்க தேசிய நலன்களுக்கு எதிரான அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுகிறார் – என்றார்.
பிற செய்திகள்