
முல்லைத்தீவு – முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் விமானப்படையினரின் பாதுகாப்புடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம அலுவலகர்களின் ஒழுங்குப்படுத்தலில் (டோக்கன் அடிப்படையில்) கிராம மக்களுக்கு எரிபொருள் வழங்கியுள்ளனர்.
இதன்போது வெளியிலிருந்து திடீரென எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் முச்சக்கரவண்டியுடன் நுழைந்த மூவர், தமது முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் வழங்குமாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நடவடிக்கைககள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளார்