கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்காக எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உணவு பாதுகாப்பு என்ற விடயத்தில் போசாக்கான உணவை பயிரிடல் மற்றும் போசாக்கான உணவை பிள்ளைகளிற்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களும் அடங்குகின்றன.

அதற்கமைய வீட்டுத்தோட்டத்தினை மேற்கொள்ளுமாறு மக்களிடம் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்த வேலைத்திட்டத்திற்காக மருத்துவ மாதுக்களையும் நாங்கள் உள்வாங்கியுள்ளோம்.

அவர்கள் ஊடாக கர்ப்பிணி தாய்மார் மற்றும் போசாக்கு குறைந்த பிள்ளைகளை கொண்ட குடும்பங்களில் வீட்டுத் தோட்டம் உள்ளிட்ட விடங்கள் ஊடா போசாக்கை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதேவேளை, நாங்கள் கைவிடப்பட்ட நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளும் திட்டத்தினையும் நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம். அதன் ஊடாக போசாக்கான உணவுகளான தாணிய வகைகளையும் மேற்கொள்வதற்கு அது வழிவகுக்கும்.

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சிறிய அளவிலான திட்டங்களை நாங்கள் முன்னெடுத்த வருகின்றோம்.

அதேவேளை மக்களிற்கான போசாக்கு எனும் திட்டம் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேவேளை, கர்ப்பிணி தாய்மாருக்கு மாதாந்தம் 2000 ருபா வழங்கும் செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கஸ்டமான நிலை மற்றும் விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கற்பிணி தாய்மாருக்காக எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

ஏனையவர்கள் தமது பிரதேசத்தில் உள்ள மருத்துவ மாதுக்களின் உதவியுடன் அருகில் உள்ள சிகிச்சை நிலையங்களிற்கு சென்று சிகிச்சை பெறவும், அல்லது அவர்களிற்கு போக்குவரத்துக்காக நோயாளர் காவு வண்டியை பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *