
இலங்கை – கொழும்பில் நாளை சனிக்கிழமையன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை அதிகாரிகள், நாட்டின் காவல்துறையின் நிதானத்தை பேணவும், வன்முறையைத் தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் உறுதிப்படுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கோரியுள்ளார்.
அதே நேரத்தில், போராட்டங்களை ஏற்பாடு செய்வோர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுமாறும், அத்தியாவசிய மருத்துவ அல்லது மனிதாபிமான சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்குமாறும் கேட்டுக்கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசனி அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்கவும் அறிக்கை செய்யவும் உரிமை உண்டு.
எனவே, அவர்கள் தமது செயல்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் பணிகள் எந்த வகையிலும் தடுக்கப்படக்கூடாது என்று பாதுகாப்புப் படையினருக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குமாறு இலங்கையின் அதிகாரிகளை தாம் கேட்டுக்கொள்வதாக ரவினா ஷம்தாசனி குறிப்பிட்டுள்ளார்.
மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை, அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு வழிவகுத்தது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு இடையே பல மோதல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறையினர் சில வேளைகளில் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகத்தை தேவையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
சில சமயங்களில் ஆயுதப்படைகள் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் அனைத்து இலங்கையர்களுக்கும் கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் பொது விவகாரங்களில் பங்கேற்கும் உரிமை உள்ளது.
தேசத்தின் வாழ்க்கையில், சர்வதேச சட்டத்தின் கீழ், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே கூட்டங்கள் கலைக்கப்பட முடியும்.
அத்துடன் முற்றிலும் அவசியமான மற்றும் கடைசி முயற்சியாகவே பலப்பிரயோகத்தை பயன்படுத்த முடியும்.
இலங்கையில் காவல்துறையினரும் ஆயுதப்படைகளும் எதிர்கொள்ளும் சவால்களை தாம் அங்கீகரிக்கும் அதே வேளையில், பொதுமக்களைக் கையாள்வதில் வன்முறையைத் தவிர்க்கவும், மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படவும், காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு, இலங்கை அரசாங்கம் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
விதிவிலக்கான சூழ்நிலைகளில், இராணுவ உறுப்பினர்கள் சட்ட அமுலாக்கப் பணிகளைச் செய்யும் போது, அவர்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரங்களுக்குக் கட்டுப்பட்டு, குடியியல் அதிகாரிகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து பொறுப்புக்கூற வேண்டியவர்களாக செயற்படவேண்டும்.
இலங்கை மக்கள் ஏற்கனவே பாரிய துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். உணவு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான உரிமை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதில் தொடர்ந்து நிச்சயமற்ற நிலையில் வாழ்கின்றனர்.
எனவே சிறந்த வாழ்க்கை மற்றும் முடிவைக் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை உள்ளது.
இந்தநிலையில் மக்களின் நெருக்கடி மற்றும் குறைகளின் மூல காரணங்களை நிவர்த்தி செய்ய வெளிப்படையான மற்றும் உண்மையான உரையாடலுக்கு மனித உரிமைகள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசனி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்