
கோட்டாவை வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்களில் வடக்கு, கிழக்கு தமிழ்த் தரப்புக்கள் தொடர்ந்தும் ஒதுங்கியிருப்பதானது மீண்டும் சிங்கள, பௌத்த பேரினவாதம் தலைதூக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமென இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய இரு போராட்டங்கள் தேசிய அளவில் நடைபெற்றுள்ளன. அதில் வடக்கு-கிழக்கு தமிழ்த் தரப்பின் பங்கேற்பு காணப்பட்டிருக்கவில்லை.
குறிப்பாக பிரித்தானிய காலனித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு இருந்தாலும் ஒட்டுமொத்தமான வடக்கு, கிழக்கின் பங்களிப்பு காணப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான நிலைமையால் தான் சிங்கள, பௌத்த பேரினவாதம் வலுவடைந்தது. நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்தவர்கள் நாம் தான் என்ற அடித்தளத்தினை மையப்படுத்தி தென்னிலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கட்டியெழுப்பினார்கள். அதன் உச்சபட்சமான வெளிப்பாடாகவே தற்போதைய ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவு செய்யப்பட்டார்.
அவர் 75சதவீதமான சிங்கள, பௌத்தர்களாலேயே தெரிவுசெய்யப்பட்டார். அவரை அதே 75சதவீதமானவர்களே வெளியேறுமாறு கூறுகின்றார்கள். போராட்டங்களை தீவிரமாக நடத்துகின்றார்கள்.
அந்தப்போராட்டங்களில் 12சதவீதமாகவுள்ள தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் சர்வாதிகாரியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான போராட்டத்தில் கூட்டுப்பங்காளிகளாக தமிழர்களும் இருப்பார்கள்.
அவ்வாறில்லாது, இளையோரின் முன்னெடுப்பில் நடைபெற்று வரும் தற்போதை போராட்டம் வெற்றிபெறுமாக இருந்தால் அதில் வடக்கு-கிழக்கு தமிழர்களின் பங்களிப்பு கணிசமாக இருக்காதிருந்தால் அது மீண்டும் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைதூக்குவதற்கே வழிவகுக்கும்.
ஏனென்றால், குறித்த போராட்டத்தினை பயன்படுத்தி மீண்டும் சிங்கள-பௌத்த பேரிவானத்தினை தென்னிலங்கை தரப்புக்கள் தர்க்க ரீதியாக கட்டியழுப்புவதற்கு வலுவான ஏதுநிலைகள் உள்ளன.
உதாரணமாக அவை சர்வாதிகாரியை தமிழர்களின் பங்களிப்பின்றியே அகற்றினோம் என்று மார்பு தட்டிக் கூறக்கூடிய சூழல் ஏற்பட்டு விடும்.
ஆகவே, இராணுவ அட்டூழியங்கள் குறித்து கரிசனைகொண்டிருக்கும் தமிழ்த் தரப்புக்கள் இராணுவ பின்னணியைக் கொண்ட சர்வாதிகார ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றுவதற்கு கிடைத்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தினைப் தவறவிடக்கூடாது என்றார்.
பிற செய்திகள்