இலங்கையில் இப்போதுள்ள அரசியலமைப்பு இன்னும் எத்தனை நாளைக்கு?- அருந்தவபாலன் கேள்வி!

இலங்கையில் இப்போதுள்ள அரசியலமைப்பு இன்னும் எத்தனை நாளைக்கு? என தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் கந்தையா அருந்தவபாலன் கேள்வி யெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

ஜனாதிபதி நந்தசேன கோதாபய ராஜபக்‌ஷ தனது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கமுடியாமல் ஓடிவிட்டதுடன் இலங்கையின் அரசியலமைப்பு வலுவிழந்துவிட்டது என்பதே யதார்த்தம்.

முப்படைகளின்தளபதி,பாதுகாப்புத் துறையின் பொறுப்பாளி ஒருவர் தன்னையே பாதுகாக்க முடியாது ஓடிவிடும்போது நாட்டின் அரசியலைப்பு முற்றாக மௌனித்து விட்டது என்பதுதான் பொருள்.

அதற்கு மேலாக ஜனாதிபதியின் பதவி வெறிதானமை அரசியலமைப்பில் சுட்டப்படும் எந்தவொரு உறுப்புரையின்பாற் பட்டதுமல்ல. அதுகூட அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டதொன்றே.

இந்திலையில் ஜனாதிபதி பதவி மட்டுந்தான் பிரச்சினை என்றவகையில் மீண்டும் அதே அரசியலமைப்பைப் பற்றிப்பிடித்துத் தீர்வுகாண முயல்வது எவ்வளவு தூரம் வெற்றியைத் தரும்? அரசியலமைப்புக்கு அப்பால் ஏன்சிந்திக்கக் கூடாது? அமைச்சரவையின் தலைவர் என்பதுடன் பிரதம அமைச்சர் உட்பட ஏனையமைச்சர்களையும் நியமனம் செய்த ஜனாதிபதியின் பதவி வெறிதாகும்போது முழு அமைச்சரவையும் வலுவிழந்துவிடும்.

அவ்வாறிருக்கும்போது அதுவும் அரசியலமைப்புக்கு முரணான வகையில் ஜனாதிபதிப் பதவி வெறிதாகும்போது எவ்வாறு அமைச்சரவை(பிரதமர் உட்பட)வலுவுடையதாக அமையும்? அமைச்சரவையே வலுவிழந்து போகும்போது எவ்வாறு தற்போதைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக முடியும்? மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியும் மக்களால் பா.உ ஆகத் தெரிவு செய்யப்பட்டவரும்,மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பா.உக்களில் பரும்பான்மையினரால் தெரிவுசெய்யப்பட்டவருமான பிரதமரும் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தியடிக்கப்படும் போது அவரைத் தெரிவு செய்த பா. உக்களையும் மக்கள் நிராகரிக்கிறார்கள் என்பதே உண்மை.

அரசாங்கத்தை அமைத்து ஆட்சி செய்வதற்கு பெரும்பான்மையாக மக்ளால் தெரிவு செய்யப்பட்டவர்களை மக்கள் நிராகரித்துவிட்டபின் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறாத எதிர்த் தரப்பினர் சடுகுடு விளையாடி ஆட்சியமைக்கும் செயலும் அரசியலமைப்புமீறல்தான்.

அதாவது அதுவும் அரசியலமைப்பு வலுவிழந்துவிட்டதாகவே கருதப்படவேண்டும். எவ்வகையில் நோக்கினாலும் இலங்கையின் இன்றையநிலை அரசியலமைப்பு நெருக்கடியேயன்றி தனியே ஜனாதிபதி பதவி தொடர்பான பிரச்சினை அல்ல என்பதே உண்மை.

இந்த அரசியலமைப்பு நெருக்கடியிலிருந்தும் அதன்வழி தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் இன்றைய பிரச்சினைகளுக்கும் நீடித்து நிலைக்கும் ஒரு தீர்வு காணவேண்டுமாயின் அரசியலமைப்புக்கு அப்பால் சென்று சிந்திக்க வேண்டும். இதற்கு வரலாற்றில் நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.

துறைசார்ந்தவர்களைக் கொண்ட குறுங்கால அதிகாரக் கட்டமைப்பு, எல்லா மக்களுக்குமான புதிய அரசியலமைப்பு, மக்கள் கருத்துக்கணிப்பு,பொதுத்தேர்தல் என்பவை பற்றி சிந்திப்பதே சிறப்பு என அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *