இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள், பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழகத்தில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் வழிகாட்டுதலில் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் வதியும் வெளியிடப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இன்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டனர்.
இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சினோபோர்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ். பல்கலைக்கழக சுகநல நிலைய வைத்திய அதிகாரி மருத்துவர் எஸ்.ராஜகுமார் தெரிவித்தார்.


