இந்திய இழுவைப் படகுகளின் அடாவடி: உரிய தரப்பினர் தூக்கமா? துரைராசா ரவிகரன் கேள்வி

இந்திய மீனவர்களின் அத்துமீறிய அடாவடிச் செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய கடற்றொழில் அமைச்சர், கடற்படையினர் மற்றும், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகிய தரப்புகள் தூக்கத்தில் இருக்கின்றார்களா?’ என, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (12), முல்லைத்தீவு மீனவர்களை சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு வினவினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

முல்லைத்தீவுக் கடற்பரப்பிலே தடைசெய்யப்பட்ட சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாகவும் தற்போது இந்திய இழுவைப்படகுகளாலும் முல்லைத்தீவு மீனவர்களின் வழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.

இவ்வாறாக அத்துமீறி முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் வருகைதரும் இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டியது யார்?

இந்த விடயத்திலே கடற்றொழில் அமைச்சர், கடற்படை, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் ஆகியோர் என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்?

இது தொடர்பிலே உரிய தரப்பினர் இதுவரையில் எடுத்த நடவடிக்கை என்ன?

இச் சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் உரியவர்கள் மேற்கொள்ளவில்லை.என்றார்.

அத்துடன், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலே ஒரு சட்டமூலத்தை எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றிலே நிறைவேற்றியிருக்கின்றார்.

அந்தச் சட்டமூலத்தை அமுல்படுத்த வேண்டியது யார்? தற்போது கடற்றொழிலுக்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் குறித்த சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என மேலும் ரவிகரன் வினவியுள்ளார்.

Leave a Reply