கோட்டாவின் அடாவடித்தனங்கள் அம்பலம்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கோட்டாவின் 969 நாட்கள் கொண்ட அதிகார அராஜக காலத்தில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பாரபட்சங்கள்,அடாவடித்தனங்கள் என தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

தன்மானமுள்ள தமிழர்களாகத் தம்மை அடையாளப்படுத்துகின்றவர்கள் இவ்விடயங்களை விளங்கிக்கொள்வார்கள்,விளக்கமற்றவர்களுக்கும் அவர்கள் விளங்கச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.தயவு செய்து உங்களின் அறிவார்ந்த கருத்துகளையும் தயங்காமல் வெளியிடுங்கள்.

1) ஜனாதிபதி கோத்தா தான் சிங்களப் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் என்றும் அம்மக்களின் ஆணையை நிறைவேற்றப் போவதாகவும் பதவியேற்பின்போது அனுராதபுரம் ருவான்வெலிசாயவில் சூளுரைத்தார்.அதன் மூலமாக தன்னை சிங்கள மக்களின் காவலனான நவீன துட்டகைமுணு மன்னனாக வெளிச்சப்படுத்தினார்.ஒருபோதும் பண்புள்ள பல்லின மக்களின் தலைவனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

2) முன்னைய ஆட்சியில் வழங்கப்பட்டிருந்த இந்துக்கலாசார, கிறிஸ்தவ விவகார,இஸ்லாமிய விவகார அமைச்சுகளை கோட்டா காணாமல் ஆக்கினார்.பௌத்த சாசன அமைச்சுக்கு மட்டுமே இடமளித்தார்.இதன் மூலம் நாட்டை சிங்கள பௌத்த நாடாகவும் தன்னை சிங்கள பௌத்த தலைவனாக மட்டுமே விலாசப்படுத்தினார்.

3) சிங்களத்தில் மட்டுந்தான் பொதுநிகழ்வுகளின் போது தேசியகீதம் பாடமுடியும் என்ற இனவாத நிலைப்பாடை கோட்டா வெளிக்காட்டினார்.

4) தமிழர்களுக்கு எதிராகப் பாரிய குற்றச்செயல்களை மேற்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்ட மோசமான குற்றவாளிகளையும் தனது இனத்தவன் என்பதற்காகவும்,பாதிக்கப்பட்டவர்கள் தமிழினத்தவர் என்பதாலும் பொதுமன்னிப்பின் கீழ் கோட்டா விடுதலை செய்தார்.

உதாரணம் சாவகச்சேரி மிரிசுவில் என்ற இடத்தில் ஐந்து வயதுக்குழந்தை உட்பட எட்டு அப்பாவித் தமிழர்களை கழுத்தை அறுத்துப் படுகொலைகள் செய்து மேல்நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தாலும் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க என்ற படையதிகாரிக்குப் பொதுமன்னிப்பளித்து சிங்களக்குற்றவாளிகளின் பாதுகாலன் ஆனார்.

5) சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை தமிழர்களின் தாயகப்பிரதேசத்தில் திணிப்பதற்காக தொல்லியல் ஆணைக்குழுவை கோத்தா அமைத்தார்.இந்த ஆணைக்குழுவானது முழுமையானளவில் சிங்கள பௌத்தபிக்குகளையும் இராணுவ அதிகாரிகளையும் கொண்டிருந்தது. இந்த ஆணைக்குழுவானது தமிழர்களின் கலாசார பூமிகளை படையினரின் பலத்துடன் ஆக்கரமித்து வந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.அதாவது சிங்கள பௌத்த மயமாக்கத்தினை இந்த ஆணைக்குழு மேற்கொண்டது.

6) மகிந்த ஜனாதிபதியாகவும்,கோத்தா பாதுகாப்புச் செயலராகவும் இருந்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரகணக்கான மக்களை மறந்துவிடுமாறு சர்வசாதாரணமாக ஜனாதிபதி கோட்டா குறிப்பிட்டார்.மனிதவுரிமைகளை பாரியளவில் மீறியவர்களைப் பாதுகாப்பதும்,நீதியை மறுப்பதுமே கோட்டாவின் நோக்கமா? எனச்சந்தேகிக்க வேண்டியள்ளது.

7) மறுக்கப்பட்ட உரிமைக்காகப் போராடி மறைந்த உறவுகளை பகிரங்கமாக நினைவுகொள்வதற்கான உளவியல் உரிமை பறிக்கப்பட்டது.மீறி நினைவு கூர்ந்தால் அவர்கள் பயங்கரவாதச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

8)நீதிமன்றத்தை அவமதித்து தண்டிக்கப்பட்ட குற்றவாளியும் தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்கும் அவமதித்து குழப்பங்களைத் தோற்றிவித்தவருமான ஞானசார தேரரின் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழு’ அமைக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவானது சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தின் பலமான குறியீடாக செயற்பட்டது.

9) மகாவலி அபிவிருத்தித் திட்டம்,தொல்லியல்காணி,வனசீவராசிக்கான காணி,வனவளக்காணி,அரசகாணி,கரையோரக்காணி,மறுசீரமைப்புக்காணி என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீகமான காணிகளை மத்திய அரசு அபகரிப்பதற்கான பொறிமுறைகள் திட்டங்கள் காணப்பட்டன,அபகரிக்கவும்பட்டன.

10) தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாகவுள்ள மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை மேற்கொண்டு அங்கு வாழும் பூர்வீகமான தமிழ் பேசுனர்களை இரண்டாந்தரப் பிரசைகளாக்கக்கூடிய இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டமை.உதாரணமாக மட்டக்களப்பில் மைலத்தமடு மாதவணை கெவுளியாமடு காரமுனை நெடியகல்மலை போன்ற இடங்களில் சிங்களக்குடியேற்றங்கள் மேற்கொண்டமை அலது முயற்சித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

11) செயற்பாடு குறைந்த நிலையில் காணப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தினை மீண்டும் உயிர்ப்பித்து தமிழ் அடிவருடிகளின் காட்டிக்கொடுப்புகளோடு தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்துப் பழிவாங்கியமை.

12) சிவில் நிருவாகத்தினை இராணுவமயமாக்கும் நோக்கில் ஓய்வு பெற்ற சிங்கள இரணுவதிகாரிகளை நியமித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியமை. என அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *