நாட்டின் ஜனாதிபதி பொறுப்பை ஏற்குமாறு சங்கக்காராவுக்கு கோரிக்கை விடுத்த விரிவுரையாளர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்காராவை நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கக் வேண்டுமென யாழ், கொழும்பு பல்கலைக்கழகங்களின் வருகை நிலை விரிவுரையாளர் Dr. முரளி வல்லிபுரநாதன் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதிப்புக்குரிய சங்க, உங்களுக்கு பல ரசிகர்கள் பல தடவைகள் திறந்த மடல் வரைந்திருக்கிறார்கள். ஆனால் இம்முறை இலங்கையில் வசிக்கும் ஒரு சமூக செயற்பாட்டாளராக மக்கள் புரட்சி இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முக்கியமான தருணத்தில் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கக் கோரும் ஒரு முக்கியமான கோரிக்கையுடன் இந்த திறந்த மடல் அழைப்பை உங்களுக்கு வரைகிறேன்.

தற்போதைய திறனற்ற ஜனாதிபதியையும் பிரதமரையும் மக்கள் புரட்சியின் மூலமாக பதவியில் இருந்து அகற்றுவதற்கு உருவாகிய அழுத்தங்கள் வெற்றி பெறும் வேளையில் துரதிஷ்டவசமாக தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் மீண்டும் ஊழல் நிறைந்த ஒரு ஆட்சி ஏற்படக்கூடிய ஏது நிலைகள் தென்படுகின்றன.

ஒருபுறம் பண பரிமாற்றம் முலமாக நாடாளுமன்றத்தில் ஆதரவை பெறும் முயற்சிகள் திரைமறைவில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மறுபுறம் தற்போதைய நாடாளுமன்றத்தில் தலைமைப் பதவியை கோரி நிற்போர் அனைவரும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களாகவோ அல்லது இனவாதம் பேசி இனமுரண்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் வாக்குகளை பெற முயன்றவர்களாகவோ அல்லது படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களாகவோ இருக்கிறார்கள்.

மீண்டும் இவர்களுக்கு நாட்டின் தலைமைப் பதவியை வழங்குவதன் மூலமாக அவர்கள் மேலும் அழிவுப் பாதைக்கு நாட்டை இட்டு செல்வதுடன் 5 வருடத்தில் இவர்களை விட மறுபடியும் ராஜபக்சர்களை பதவிக்கு அழைக்கலாம் என்ற நிலை ஏற்படலாம்.

சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்து இவர்களும் இவர்கள் சார்ந்த கட்சிகளும் தொடர்ச்சியாக தரகுப் பணம் பெறுவதன் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை அழித்து, இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தூண்டி பாதுகாப்பு செலவீனங்களை அதிகரித்து வந்திருப்பதுடன் படுகொலைகள் மற்றும் கப்பம் பெறுவது உட்பட பல குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்களாக இருந்துள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயல்பாட்டினாலேயே சில இலங்கையர்கள் சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தால் இலங்கை பிரித்தானிய ஆட்சியின் கீழ் தற்போதைய நிலையை விட மேம்பட்ட பொருளாதார நிலையையும் வளர்ச்சியையும் கண்டிருக்கும் என்று கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் இளைஞர்கள் பாடுபட்டு மக்கள் புரட்சியின் முலமாக பெற்ற வெற்றியை தக்க வைப்பதற்கு ஊழலற்ற இரத்தக் கறை படியாத மக்கள் கஷ்டங்களை உணர்ந்த இனவாத செயல்பாட்டில் ஈடுபடாத மக்கள் ஆதரவை பெற்ற கற்றுணர்ந்த ஒரு தலைவர் மிகவும் அவசியம்.

பிரான்ஸ், ரஷ்யா உட்பட மக்கள் புரட்சி மூலம் ஆட்சித் தலைவர்கள் அகற்றப்பட்ட நாடுகளில் புதிய யாப்புடன் பாரிய அமைப்பு மாற்றம் ஏற்பட்ட நிலையில் தான் அந்த நாடுகள் மீண்டும் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வலிமையான நாடுகளாக உருப்பெற்றன.

நீங்கள் கடந்தகாலத்தில் மக்களின் கஷ்டங்களை உணாந்து பல காணொளிகளையும் செய்திகளையும் வெளியிட்டு இருக்கிறீர்கள். சட்டத்துறையில் முதுமாணி பட்டம்பெற்று அரசியலமைப்பில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய புலமையை கொண்டிருக்கிறீர்கள்.

கடந்த காலத்தில் ஊழல் மற்றும் இனவாத செயல்பாட்டில் சம்பந்தப்படாமல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய சுத்தமான தலைவராக இருந்திருக்கிறீர்கள்.

இத்தகைய ஒருவரை நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கோருவதில் நான் பெருமை கொள்கிறேன்.

இளைஞர் சமுதாயத்தின் கனவாகிய ஊழலற்ற சமத்துவமான புதிய இலங்கையை உருவாக்குவதில் உங்களின் பங்களிப்பும் தலைமைத்துவமும் மிகவும் அவசியம் என யாழ், கொழும்பு பல்கலைக்கழகங்களின் வருகை நிலை விரிவுரையாளர் Dr. முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *